அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Tuesday, April 28, 2015

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும்

அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்வுக்கே உரியவையாகும். அவற்றில் ஒரு பாகத்தை (மனிதன், ஜின், பறவைகள், மிருகங்கள், ஊர்வன என) அனைத்துப் படைப்பினங்களுக்கிடையே அல்லாஹ் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன்மீதொன்று பாசம் கொள்கின்றன; பரிவு காட்டுகின்றன. அதன் மூலம்தான் காட்டு விலங்குகூட தன் குட்டி மீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் (நல்ல) அடியார்களுக்கு (விஷேசமாக) அன்பு காட்டுவான்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னுமாஜா 4291)

உம்ராச் செய்யும் முறை

புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது. ஸலவாத்தும் ஸலாமும் எமது இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களுடைய குடும்பத்தினர்கள், தோழர்கள் அனைவர் மீதும் உண்டாவதாக!.

இஸ்லாமிய சகோதரனே! புனித மக்காவிற்குச் சென்று உம்ராச் செய்வதில் அதிக நன்மை உண்டு. அந்நன்மைகளை அடைந்து கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாம் மக்காவிற்குச் சென்று உம்ராச் செய்கின்றோம். நாம் செய்கின்ற உம்ரா நாயகம் (ஸல்) அவர்கள் செய்து காட்டிய முறைப்படி இருக்க வேண்டும். அப்போதுதான் அது அல்லாஹ்வினால் ஏற்றுக் கொள்ளப்படும். எனவே உம்ராவிற்கு செல்பவர்கள் இப்பிரசுரத்தை படிப்பதன் மூலம் உரிய முறையில் தங்களது உம்ராக்களை நிறைவேற்றலாம் என எண்ணுகின்றேன்.

உம்ராச் செய்யும் முறைகள்:
உம்ராச் செய்ய நாடுபவன் “மீகாத்” எல்லையை வந்தடைந்ததும் குளித்து, தன்னை சுத்தம் செய்து கொள்வது ஸுன்னத்தாகும். பெண்களும் ஆண்களை போன்று இவ்வாறு குளித்து, தங்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய், பிள்ளைப்பேறு இரத்தப்போக்கு ஏற்பட்ட பெண்கள் கூட குளிப்பது ஸுன்னத்தாகும். பின்னர் சிறந்த நறுமணங்களைப் பூசிக் கொள்ள வேண்டும். இது ஸுன்னத்தாகும். இஹ்ராம் அணிந்ததன் பின்னர் அதன் சுகந்தம் இருந்தால் அதில் குற்றமில்லை.

உம்ராச் செய்ய செல்லும் ஆண்கள் தைத்த ஆடைகள் அணியக்கூடாது. தைத்த ஆடைகள் அனைத்தையும் கழற்றி விட்டுப் தைக்காத, சுத்தமான இரண்டு வெள்ளை ஆடைகளை மாத்திரம் அணிந்து கொள்ள வேண்டும். இது தான் ஸுன்னத்தாகும்.

இதற்கு ‘இஹ்ராம் ஆடை’ எனச் சொல்லப்படும். பெண்கள் வழமையில் தாங்கள் அணிகின்ற, விரும்பிய எந்த ஆடையானாலும் அதை அவர்கள் அணியலாம்.

பின்னர் மீகாத் எல்லையில் உம்ராவிற்காக நிய்யத் செய்யுமுன் அவ்விடத்தில் பள்ளிவாசல் இருந்து, கடமையான தொழுகை நேரமாக அது இருந்தால் அத்தொழுகையை நிறைவேற்ற வேண்டும். தொழுகை நேரமில்லையென்றால் பள்ளிக் காணிக்கையான “தஹிய்யதுல் மஸ்ஜித்” இரண்டு ரகாஅத் தொழுது கொள்ள வேண்டும்.

பின்னர், உம்ராச் செய்யச் செல்பவன் மீகாத் எல்லையிலிருந்து “லப்பைக்க உம்ரத்தன் ” என்று உம்ராவிற்காக நிய்யத் செய்ய வேண்டும். மனதால் நிய்யத் செய்வதோடு நாவால் மொழிவதும் ஸுன்னத்தாகும்.

பின்னர் ஆண் பெண் அனைவரும் “தல்பியா” சொல்ல வேண்டும். இதை தொடர்ந்து, அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். ஆண்கள் இதை சப்தமிட்டும், பெண்கள் மற்றவர்களுக்குக் கேட்காமல் தங்களுக்குள்ளே கேட்குமளவிற்கு மெதுவாகவும் தல்பியா சொல்ல வேண்டும்.
மேலும் மக்காவை வந்தடையும் வரை அதிகமாக திக்ர் செய்வதும், அதிகமாக பிரார்த்தனை செய்வதும் ஸுன்னத்தாகும்.

தல்பியா சொல்லும் முறை:
“லப்பைக், அல்லாஹும்ம லப்பைக், லப்பைக், லாஷரீக லக லப்பைக், இன்னல் ஹம்த வன்னிஃமத லக வல் முல்க் லாஷரீக லக்”
(பொருள்: “நான் வந்து விட்டேன். யா அல்லாஹ் நான் வந்து விட்டேன். நான் வந்து விட்டேன். உனக்கு இணையாக எவரும் இல்லை. நான் வந்து விட்டேன். நிச்சயமாக அனைத்துப் புகழும், ஆட்சியும், அதிகாரமும் உனக்கு மட்டுமே உரித்தது. (மீண்டும் கூறுகிறேன்) உனக்கு இணை எவரும் இல்லை”).

பின்னர் உம்ராச் செய்ய வருபவன் மக்காவில் மஸ்ஜிதுல் ஹராமை வந்தடைந்ததும் தனது வலது காலை வைத்து பிரவேசிக்கும் போது கீழ் வரும் துஆவை (பிராத்தனையை) ஓத வேண்டும். அதாவது:

“பிஸ்மில்லாஹ் வஸ்ஸலாது வஸ்ஸலாமு அலா ரஸுலில்லாஹ் அல்லாஹும்மஃக்பிர்லீ துனூபீ வஃப்தஹ்லீ அப்வாப ரஹ்மதிக. அஊது பில்லாஹில் அளீம், வபிவஜ்ஹிஹில் கரீம், வபிசுல்தானிஹில் கதீம் மினஷ் ஷைதானிர் ரஜீம்”

(பொருள்: “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் சாந்தியும், சமாதானமும் அல்லாஹ்வின் தூதர் மீது உண்டாவதாக. யா அல்லாஹ் என் பாவங்களை மன்னித்து உன் கருணையின் கதவுகளை எனக்குத் திறந்து விடுவாயாக. சாபத்திற்கு ஆளான ஷைதானின் தீங்கிலிருந்து தப்பித்துக் கொள்ள சர்வ சக்தியும், உயர்ந்த பார்வையும், முழுமையான அதிகாரமும் படைத்த அல்லாஹ்வின் உதவியை நாடி நிற்கின்றேன்”)

பின்னர் அவன் தல்பியாக் கூறுவதை விட்டு விட்டு நேராக ஹஜருல் அஸ்வத் எனும் கல்லை முத்தமிட செல்ல வேண்டும். அக்கல்லை முத்தமிட முடியாமல் போனால் அதன் பக்கம் திரும்பி கையைக் காட்டுவது போதுமானது. அச்சமயம் அங்கிருப்போருக்கு தொல்லை தரும் விதத்தில் நடந்து கொள்வது கூடாது. மற்றவர்களைத் தள்ளிக் கொண்டு பலாத்காரமாக எதையும் செய்வதற்கு முற்படக் கூடாது. அனைத்தையும் மிக அமைதியாகச் செய்ய வேண்டும். ஹஜருல் அஸ்வத் கல்லைத் தொடும் போது கீழ் வரும் துஆவை ஓத வேண்டும். அதாவது:

“பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்.அல்லாஹும்ம ஈமானன் பிக, வதஸ்தீகன் பிகிதாபிக, வவஃபாஅன் பிஅஹ்திக, வ இத்திபாஅன் லிஸுன்னதி நபிய்யிக முஹம்மதின் ஸல்லல்லாஸு அலைஹி வஸல்லம்”
(பொருள்: “அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்; அல்லாஹ் மிகப் பெரியவன்; யா அல்லாஹ் உன்னை நம்பிக்கை கொண்டு, உன்னுடைய வேதத்தை உண்மைப்படுத்தி, உன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி, உன்னுடைய நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஸுன்னத்தை பின்பற்றியவனாக இதை நான் செய்கின்றேன்”)

ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட முடியவில்லையென்றால் தனது கையால் சைக்கினை மாத்திரம் செய்து கொள்ள வேண்டும். கையால் சைக்கினை செய்து அக்கையை முத்தமிடக் கூடாது. பின்னர் தவாஃப் செய்ய வேண்டும்.