அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Saturday, February 19, 2011

பெற்றோரைப் பேணுவோம்


MUST READ 
M.A. முஹம்மது அலீ
ஒரு வீடு என்பது மண்ணாலும் கற்களாலும் ஆனது. அதுபோல் ஒரு குடும்பம் என்பது அன்பாலும் பாசத்தாலும் ஆனது. அந்தப்பாசப்பிணைப்பு இன்று கொஞ்சங் கொஞ்சமாக மனித மனங்களிலிருந்து கழன்று கொண்டிருக்கிறதோ என்கின்ற ஐயப்பாடு தோன்றுகிறது.

பெற்றோர் அன்பு, சகோதர பாசம் உறவுத்தொடர்புகள் எல்லாம் குறைந்து வருகிறது. 'வீட்டின் பெயரோ அன்னை இல்லம் அன்னை இருப்பதோ முதியோர் இல்லம்.' சில இடங்களில் இன்று இந்த நிலைதான். இந்த நிலையில் தாய் - தந்தை உறவு பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போம்.
தாய்க்கு முதலிடம்: 'மனிதர்களுள் யாருக்கு நான் அதிகக் கடன்பட்டுள்ளேன்?' இது நபித்தோழர் ஒருவரின் வினா. 'தாய்' என்று பதிலளித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். 'அடுத்து யார்?' என மீண்டும் அவர் கேட்க, 'தாய்' என்றே கூறினார்கள். மூன்றாவது முறையாக 'அடுத்து யார்?' என்று கேட்டபோதும் 'தாய்' என்றே பதில் வந்தது. 'அடுத்து யார்?' என நான்காம் முறையாக அவர் கேட்க 'தந்தை' என்று பதிலளித்தார்கள் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள். ( அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, - புகாரீ ஷரீஃப்.)
ஒரு குழந்தையின் வளர்ச்சிக்கு தாய்-தந்தை இருவருமே காரணம் என்பது உண்மையானாலும் தந்தையைவிட தாய்க்கே முதலிடம் வழங்குகிறது இஸ்லாம். காரணம் என்ன? திருக்குர்ஆன் கூறுகிறது: 'அவனுடைய அன்னை, அவனைச்சிரமத்துடனேயே கருவுற்று சுமந்திருந்தாள். சிரமப்பட்டுத்தான் அவனைப் பெற்றெடுத்தாள். மேலும், அவனைச் சுமந்திருப்பதற்கும் பால்குடிப்பை மறக்கடிப்பதற்கும் முப்பது மாதங்கள் ஆகின்றன.' ( அல் குர்ஆன் 46:15).
தியாகத்திற்கு தாயைவிட வேறு சிறந்த உதாரணம் சொல்வது சிரமம். அவள் ஒரு குழந்தையின் பிறப்புக்காக இறப்பின் வாசல்வரை சென்று வருகிறாள; தன் உயிரைப் பணயம் வைத்துக் குழந்தையைப் பெறுகிறாள். குழந்தைக்காகத் தாய் செய்யும் தியாகம் மகத்தானது. கொஞ்ச நேரம் இளைப்பாறிக்கொள்ள ஒரு பத்து நிமிடம் மற்றொருவரின் விரகுச்சுமையைத் தாங்கி நிற்கவே ஒதுங்கிவிடுகிற இந்த காலத்தில் தொடர்ந்து பத்து மாதம் ஒரு சிசுவைத் தன் வயிற்றில் சுமப்பதென்பது எவ்வளவு பெரிய தியாகம்!
குழந்தைக்கு நோய் என்றால் தான் பத்தியம் இருக்கிறாள் என்பது மாத்திரம் அல்ல, நோய்வாய்ப்பட்ட குழந்தை மருந்து சாப்பிட விரும்பாதபோது நலமாயுள்ள தாய், தானும் அந்த மருந்தை சிறிது குடிக்கிறாள். ஏன்? தாய்க்கும் தனக்கும் ஒரே  நோய்தான் என்று குழந்தை எண்ணி ஆறுதல் அடைவதற்காக. ஒரு அறிஞரின் சொல் எப்படி இருக்கிறது பாருங்கள்: 'ஒரு தாய் தனக்கு என்னவாவெல்லாம் இருக்கிறாள் என்பதை மனிதன் கடைசிவரை உணர்வதில்லை. அவன் அதை உணரும் போது அவள் உயிரோடு இருப்பதில்லை'. சிலரது வாழ்வில் இது உண்மையுங்கூட!
தாயன்பு: ஒரு பெண் தன் இரு பெண் மக்களுடன் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து யாசகம் கேட்டு நின்றாள். அவளிடம் மூன்று பேரித்தங்கனிகளை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கொடுக்கின்றார்கள். அவற்றில் ஒன்றை தனக்கு வைத்துக்கொண்டு மற்ற இரண்டையும் தன் மகள்களுக்கு சாப்பிடக் கொடுக்கிறாள். அவற்றை அவர்கள் சாப்பிடுகின்றனர். தனக்குரியதை சாப்பிட அந்த பெண் எத்தனித்த போது அதையும் தங்களுக்குத் தரக்கேட்டு அந்தக் குழந்தைகள் அடம்பிடிக்கின்றன. எவ்வித முகச்சுழிப்புமின்றி சந்தோஷமாக அப்பழத்தை இரண்டாகப் பிளந்து ஆளுக்கு ஒன்றாகக் கொடுத்துவிட்டு அவர்கள் சாப்பிடுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். இந்த நிகழ்ச்சி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹாவின் மனதைப்பெரிதும் பாதித்தது. இரவில் வீடு திரும்பிய நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இந்த நிகழ்வைக்கூற, மெய்சிலிர்த்துப் போன நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'அவள் நேரடியாக சுவனம் செல்வாள்' என்ற சுபச்செய்தியை தெரிவிக்கிறார்கள். ( அப்துல்லா இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு - முஸ்லிம் ).
கண்ணியமான உறையாடல்: தாய் - தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவருமோ முதுமை அடைந்துவிட்ட நிலையில் உம்மிடம் இருந்தால் அவர்களை 'சீ' என்றுகூடக் கூராதீர். மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக ( திருக்குர் ஆன் 17:23 ). பொதுவாக வயசு கூடக்கூட டென்ஷன் அதிகமாகும்.
இதுமாதிரி முதுமைப் பருவத்தில் பெற்றோர் நம் மனம் புண்படும் விதத்தில் நம்மைப் பேசிடலாம், ஏசிவிடலாம். ஆனாலும்கூட அதற்குப்பகரமாக நாம் பேசிடும் ஒவ்வொரு வார்த்தையிலும் கண்ணியம் இழையோட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் பெற்றோரின் மறியாதையைக் குதறிவிடக்கூடாது. 'பெற்றோரைத் திட்டுவது பெரும் பாவங்களில் ஒன்று' என நபிகள்நாயகம் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள் கண்டிக்கிறார்கள். நீ நேரடியாகத் திட்டுவது ஒருபுறம் இருக்கட்டும், நீ ஒருவனின் தந்தையைத் திட்ட அவன் பதிலுக்கு உன் தந்தையைத் திட்டக்கூடிய சூழலைக்கூட உருவாக்கி விடாதே என்று உணர்த்துகிறார்கள். ( முஸ்லிம் )
உணவளிப்பது: நடைமுறை வாழ்வில் பெற்றோருக்கு உணவூட்டிப் பராமரிக்கும் விஷயத்தில்கூட கஞ்சத்தனம் செய்யப்படுகிறது. பெற்றோர் வசதியாக இருந்து பூர்வீகச்சொத்துகளில் கொஞ்சம் கூடுதலாகக் கிடைத்தால் உணவு, வசதி எல்லாவற்றிலும் அவர்களுக்கு சகல மரியாதையும் கிடைக்கிறது. இல்லையெனில் சாதாரண அளவுக்குக்கூட இருக்காது. நகை பணம் தந்தால் அம்மா அப்பா இல்லாவிட்டால் டப்பா. இது எந்த வகைக்குணமோ? அம்மா அப்பா உயிரோடிருக்கும்போதே ' நாற்காலி உனக்கு, கட்டில் எனக்கு, பீரோ உனக்கு கிரைண்டர் எனக்கு' என்று பொருட்களைப் பங்கு வைத்து, முடிவில் அப்பா உன்னிடம் அம்மா என்னிடம், அப்பாவுக்கு ஒரு வீட்டில் சாப்பாடு அம்மாவுக்கு இன்னொரு வீட்டில் சாப்பாடு என்று ஜடப்பொருட்களாகப் பெற்றோரைப் பங்கு பிரிக்கும் பண்பாட்டுச் சீர்குலைவை எண்ணி வருந்தாமல் இருக்க முடியவில்லை.
பெற்றோர்கள் இருவரையும் ஒருசேர வைத்து உணவு கொடுத்தால் என்ன? இருவருக்கும் சேர்த்து சமைப்பது கஷ்டமா? பொருள் நஷ்டமாகிவிடுமா என்ன? நாளை இவர்களை இவர்களுடைய பிள்ளைகள் சோறு ஒருவீட்டிலும் குழம்பு ஒரு வீட்டிலும் போட்டு கொடுமைப் படுத்தினால் என்ன செய்வார்கள்? 'எங்களுக்கே தட்டுப்பாடு, இதிலே பெற்றோர்களை எங்கே கவனிப்பது?' என்று கேட்பவர்களின் காதில் ஒருசெய்தியைப் போடவேண்டியுள்ளது. ஏழெட்டுக் குழந்தைகளுக்கு, தாய், தந்தை இருவருமாகச் சேர்ந்து சோறூட்ட முடிகிறதென்றால் அந்த ஏழெட்டுப்பேர் சேர்ந்து அந்த இருவருக்கும் சோறூட்ட முடியாதா என்ன!
இதிலே நகைப்பிற்குரிய செய்தி, உயிரோடு இருக்கும்போது ஒரு வாய் சோறு போட்டு பெற்றோரைக் கவனிக்காத சில ஆசாமிகள், அவர்களின் மரணத்திற்குப்பின் 'ஃபாத்திஹா' கொடுக்கிறோம் என்னும் பெயரில் பல்வேறு உணவுப்பொருட்களை முன்னால் வைத்து அமர்க்களப்படுத்துவார்கள். சிலர் திருமணத்திற்கு முன் பெற்றோருக்கு நன்கு உபகாரம் புரிவார்கள். ஆனால் மனைவியின் வருகைக்குப் பிறகு மாற்றங்கள் ஏற்படும்.தலையணைமந்திரம் என்று சொல்லவேண்டிய அவசியமில்லை. உடலால் தளர்ச்சியடைந்துவிட்ட பெற்றோரை மனைவியின் சொல்கேட்டு மனத்தளவிலும் தளர்ச்சியடைய வைப்பவன் மனிதாபமுள்ள மகனாக இருக்க முடியாது.
சிந்தனைக்கு சில அறிவுரைகள்: குழந்தைப் பருவத்தில் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் உபகாரம் புரிந்தால் முதுமைப் பருவத்தில் உங்களுடைய குழந்கைள் உங்களுக்கு உபகாரம் புரிவார்கள்.(அபூஹுரைரா ரளில்லாஹுஅன்ஹு (ஹாகிம்) இதை இப்படியும் புரட்டிப்போட்டுசொல்லலாம். தம்முடைய பெற்றோரை அவமதிக்கும் ஒவ்வொருவரும் அவர்தம் பிள்ளைகளால் பிற்காலத்தில் அவமதிக் கப்படுவது நிச்சயம்.
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, பைஹகியில் பதிவாகியுள்ள ஆதாரப்பூர்வமான நபிவழிச்செய்தி: 'ஒவ்வொரு குற்றத்திற்கான தண்டனையும் மறுமையில் வழங்கப்படுவதுதான் இறைவிதி. ஆனால் பெற்றோருக்கு நோவினை செய்தவன் அதற்கான பிரதிபலனை இவ்வுலகிலேயே கண்கூடாகக் கண்டபின்பே இறப்பான். (நவூதுபில்லாஹ்)
மனப்பதிவுக்கான இன்னொரு செய்தி: 'ஒரு நபித்தோழர் நபிகள்நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் அவைக்கு வந்து, நான் இஸ்லாத்திற்காக நாடுதுறந்து செல்லத்தங்களிடம் உறுதிமொழிஎடுத்திட வந்துள்ளேன்.என் தாய், இதற்கு அனுமதியளிக்காத நிலையில் அவரையழவைத்துவிட்டு இங்கே புறப்பட்டு வந்துள்ளேன்.' எனக் கூறினார். உடனே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மொழிந்த வார்த்தை என்ன தெரியுமா? 'உடனே இங்கிருந்து புறப்பட்டு அழுதுகொண்டிருக்கும் உனது தயைச்சிரிக்க வைத்துவிட்டு பிறகு வந்து என்னைப்பார்.'(அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹுஅன்ஹு-அபூதாவூது).
நம்மில்
சிலர் பெற்றோரை அழவைத்துவிட்டு தொழுது அல்லாஹ்வை சந்தோஷப் படுத்திடலாம் என்கிற எண்ணத்தில் இருக்கலாம். அவர்களுக்கான நபிமொழி செய்தி இது: 'அல்லாஹ்வின்; பொருத்தம் பெற்றோரின் பொருத்தத்தில் இருக்கிறது. அல்லாஹ்வின் கோபம் பெற்றோரின் கோபத்தில் இருக்கிறது.'பொதுவாக திருக்குர்ஆன் எல்லா இடங்களிலும் தாயோடு இணைத்து தந்தைக்கும் பணிவிடை செய்வதையே வலியுறுத்துகிறது. திருக்குர்ஆன் தெளிவுரையின் சிறந்தவராக கருதப்படும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது திருக்குர்ஆன் விரிவுரையில் ''மூன்று திருக்குர்ஆன் வசனங்கள் ஒன்றுடன் இன்னொன்று இணைத்து வந்துள்ளன. ஒன்றை விட்டு விட்டு மற்றொன்றை மட்டும் செய்தால் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்.' என்கிறார்கள்.
அது:
1.'அல்லாஹ்வுக்கு வழிப்படுங்கள், அவன் தூதருக்கும் வழிப்படுங்கள்'(3:32) என்கிறது திருக்குர்ஆன். அல்லாஹ்வுக்கு மட்டும் வழிப்பட்டு அவன் தூதருக்கு வழிப்படாவிட்டால் அவனை அல்லாஹ் ஏற்க மாட்டான். (இங்கு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வழிப்படுங்கள் என்பது அவர்கள் சொல்லுக்கு கட்டுப்படுங்கள் என்பதாகும்)
2. ''
தொழுகையை நிலை நிறுத்துங்கள் ஜகாத்தையும் கொடுங்கள்.'' (2:43)
என்கிறது திருக்குர்ஆன். வசதியுள்ள செல்வந்தன் ஜகாத் கொடுக்காமல் தொழுகையை மட்டும் தொழுதால் ஈடேற்றம் கிடைக்குமா?
3. ''எனக்கும் (அதாவது அல்லாஹ்வுக்கும்) உன்னுடைய தாய் தந்தையர்க்கும் நன்றி செலுத்தி வருவாயாக.'(31:14) என்கிறது திருக்குர்ஆன். அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தியவன் தாய் தந்தைக்கு நன்றி செலுத்தாவிட்டால், அதையும் அல்லாஹ் ஏற்கமாட்டான்'' என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விளக்குகிறார்கள்.

அல்லாஹ்வின் அருள்மறை தெரிவிக்கிறது: ''அந்த இறைவணைத்தவிர வேறு எவரையும் நீங்கள் வணங்காதீர்கள். தாய் தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள். பெற்றோரில் ஒருவரோ இருவரோ முதுமையை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை 'சீ' என்றுக் கூட கூறவேண்டாம். மேலும் அவர்களைக் கடிந்து பேசி விரட்டவும் வேண்டாம். ஆவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக! இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக: மேலும், 'என் இறைவனே நான் குழந்தையாக இருந்தபோது என்னை இவர்கள் எவ்வாறு (அன்போடும் பாசத்தோடும்) வளர்த்தார்களோ, அவ்வாறே, நீயும் இவர்கள் மீது கருணை புரிவாயாக! என்றும் கூறி பிரார்த்திப்பீராக!'' (திருக்குர்ஆன் 17:23,24)
அதுமட்டுமின்றி, 'நாம் மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கம் நலம்; செய்ய வேண்டியது) பற்றி அறிவுறுத்திக் கட்டளையிட்டுள்ளோம்.' (திருக்குர்ஆன் 31:14) என்று பல இடங்களில்அ தாய் தந்தை இருவருக்கும் அடிபணிந்து நன்றி செலுத்தி வருமாறு கூறும் இல்லாஹ், தாயின் தகுதியை தந்தையைவிட ஒருபடி மேலாக உயர்த்திச் சொல்வதற்கான காரணத்தையும் கூறுகிறான்.
''
அவனுடைய தாய் பலவீனத்தின் மேல் பலவீனம் கொண்டவளாக அவனைத் தன் கர்ப்பத்தில் சுமந்தாள், மேலும் அவன் பால்குடி மறக்க இரண்டு வருடங்கள் பிடிக்கின்றன.' (அல் குர்ஆன் 31:14)என்று தாய் அனுபவிக்கும் துன்பத்தை தெளிவாகக் கூறகிறான். 'பலவீனத்தின் மேல் பலவீனமாக' என்ற அல்லாஹ்வின் கூற்றுக்க இன்றைய மருத்துவ வல்லுநர்கள் கூறும் விளக்கத்தை கவனியுங்கள்:
குழந்தை தன் எலும்புகள் வளரத் தேவையான 'கால்சியம்' சத்தை தாயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சிக் கொள்கிறது. அதே போல் தனக்குத் தேவையான இரும்புச்சத்தை தாயின் இரத்தத்திலிருந்து பெற்றுக் கொள்கிறது.
தாயின் கருப்பைச் சுவர்கள் குழந்தைக்கு வேண்டிய இரத்தத்தை அதிகரிப்பதால் விரிவடைகின்றன. இதனால் தாயின் மூளைக்கு செல்லும் இரத்தத்தின் அளவு குறைகிறது. தலை சுற்றல்கூட வரும். தாயின் இதயம் கற்ப காலத்தில் மட்டும் மிக அதிகமாக இயங்குகிறது. இதனால் தாய்க்கு அதிக களைப்பு நெஞ்சுக்கரிப்பு கூட ஏற்படுகிறது.
குழந்தையின் எடை அதிகரிக்கும்போது தாயின் கீழ் முதுகில் வலி ஏற்படுகிறது. இதன் மூலம் தலைவலி, வயிற்று வலி, கால்வலி, பார்வையில் மந்த நிலை ஏற்படுகிறது.
பொதுவாக குழந்தை பெற்ற பின் தாய்மார்களில் 25 முதல் 50 சதவிகித தாய்மார்கள் மனநலக்குறைவு அடைகிறார்கள் என்கின்றனர் மருத்துவ மேதைகள். மெய் சிலிரக்க வைக்கும் தாயின் தியாகத்தை மறக்கலாமா?
ராட்சசியாக இருக்கும் தாய்க்குமா மரியாதை!
சிலருக்கு ஒரு சந்தேகம் ஏற்படுவதுண்டு: ஒரு ராட்சசியாக இருக்கும் தாய்க்குமா மரியாதை செய்ய வேண்டும்?
ஆம்! மரியாதையும் பணிவிடையும் செய்தே ஆக வேண்டும். இஸ்லாத்தின் பார்வையில் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிற பாவத்தை விட பெரும்பாவம் எதுவும் இந்த உலகில் இல்லை. அப்பேர்பட்ட பாவம் புரிபவளாக ஒரு தாய் இருப்பினும் அவருக்குச் செய்ய வேண்டிய பணிவிடைகளை செய்தே ஆக வேண்டும்.
ஹள்ரத் அஸ்மா பின்த் அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹா என்கின்ற பெண்மணியின் தாயார் முஸ்லிமாகாத நிலையில் அல்லாஹ்வுக்கு இணை வைப்பவராக இருந்து கொண்டு தம் மகளை தேடி வந்த போது 'யா ரசூலுல்லாஹ், என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார், நான் அவருடன் உறவாடலாமா?' என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'ஆம்! நீ உன் தாயை பேணி இரக்கத்தோடு நடந்து கொள்,' என்றார்கள். ( ஆதாரம்: புகாரி )
முஸ்லிமாகாமல் இணை வைக்கிற பெரும் பாவத்தைச் செய்து வருகிற தாயே ஆனாலும், அவரைப் பேணி வருவது கட்டாயம் என்றால், ஒரு தாய் ராட்சசியாக இருக்கிறார் என்பதற்காக அவரை மதிக்காமல் இருக்க இஸ்லாம் அனுமதிக்குமா என்ன? ராட்சசியாக இருந்தாலும் அவரையும் இரக்கத்தோடு அணுகுவதே இஸ்லாத்தின் ஆணை.
'தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது'' என்று சொன்ன மார்க்கம் இஸ்லாம் மட்டுமே என்பதை மறந்து விட வேண்டாம். நாம் அணைவரும் பெற்றோரைப் பேணக்கூடியவர்களாகத் திகழ எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக, ஆமீன்.
www.nidur.info
 

ஒற்றுமையைப் பேணுவோம்


எம்.. முஹம்மது அலீ

'காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். ஆயினும், எவர்கள் நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்களையும் செய்து, சகித்துக்கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர! ( இவர்கள் நஷ்டவாளிகள் அல்ல)' (திருக்குர்ஆன் 103 : 1-3)
ஆகாயத்தை அண்ணாந்து பார்க்கும் மனிதன் பறவையினங்கள் கூட்டங்கூட்டமாகப் பறப்பதை காணுகின்றான். பூமியை உற்று நோக்கும்போது எறும்புகள் சாரை சாரையாக ஊர்ந்து செல்வதைப் பார்க்கின்றான். ஆனால், இவைகளிடமுள்ள ஒற்றுமை என்னும் உயர் பண்பை மட்டும், கண்டும் காணாதவனாக இருந்து வருகின்றான்.

காடுகளில் வாழும் மிருகங்கள்கூட தத்தம் இனத்தோடு ஒன்றாக சேர்ந்து வாழத்தெரிந்து கொண்டிருக்கும்போது ஆறறிவு படைத்தவன், ஆற்றல் மிக்கவன் என்று சொல்லிக்கொள்ளும் மனிதன் மட்டும் தனது இனத்திற்குள் தெரிந்தோ தெரியாமலோ ஆயிரக்கணக்கான பிரிவுகளை வகுத்துக்கொண்டு பிளவுபட்டு நிற்கின்றான்.
இன்று ஒற்றுமையைப்பற்றி எண்ணாத குடும்பத் தலைர்களில்லை, போதிக்காத ஆசிரியர்களில்லை, பேசாத அரசியல்வாதிகளில்லை, வலியுறுத்தாத அறிஞர்களில்லை! ஆனால் ......... ! மனித வாழ்விவில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் முதன் முதலாக அவன் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். 'பொறுமையாளர்களுடன்தான் அல்லாஹ் இருக்கிறான்' என்பது திருக்குர்ஆனின் முழுமையான, வழிகாட்டும் ஒற்றுமைக்கான ஒளிவிளக்கு.
அல்லாஹ், மேலும் கூறுகின்றான், 'நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் வழிப்ப(ட்)டு(உங்களுக்குள் ஒற்றுமையாயிரு)ங்கள். உங்களுக்குள் சண்டையிட்டுக் கொள்ளாதீர்கள். அப்படியிருந்தால், நீங்கள் தைரியத்தை இழப்பதுடன் உங்கள் வலிமையும் குன்றிவிடும். ஆகவே நீங்கள் (துன்பங்களை சகித்துக்கொண்டு) பொறுமையாயிருங்கள். நிச்சயமாக அல்லாஹ், பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.' (அல் குர்ஆன் 8-46)

அல்லாஹ்வையும் அவனது தூதரையும் உண்மையாக வழிப்படுவதன் மூலம் ஒற்றுமை மலரும் என்பதை சுட்டிக்காட்டுவதுடன் வீணாக சண்டையிட்டு பிளவுபட்டு நிற்க வேண்டாம் என்பதனையும், அவ்வாறிருந்தால் ஏற்படக்கூடிய இழப்பினை நமக்கு எச்சரிப்பதுடன், பொறுமையைக்கொண்டு அதனை வெல்ல முடியும் என்பதனையும், அவ்வாறு பொறுமையுடன் இருப்பவர்களுடன் தானும் இருப்பதாகக் கூறுவதன் மூலம், ஒற்றுமையின் உயர்வை அல்லாஹ் மேலும் சிறப்பிக்கின்றான்.
அடுப்பங்கரை முதல் அரசியல் மேடை வரை ஒற்றுமை என்பது எட்டாக்கனியாக ஆகிக்கொண்டு வருகிறது. சமையலறையில் இருப்பவர்கள்(மாமியாரோ, மருமகளோ) மனமகிழ்வுடன் ஒன்றுபட்டு சமைப்பார்களானால் கிடைப்பது சுவையான உணவாக இருக்கும் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை! அதற்கு மாற்றமாக அங்கு பிணக்கு ஏற்பட்டால் என்னவாகும்? ஓன்று, அடுப்பே எறியாது அல்லது உப்போ காரமோ, சரியான அளவில் சேர்க்கப்படாத சுவையற்ற உணவுதான் அன்றைக்கு! ஒற்றுமை எங்கு சிதறினாலும் எல்லோருக்கும் நட்டம்தான்.
தனியொரு கையால் ஓசை எழுப்ப முடியாது. பல கரங்கள் ஒன்று சேர்ந்தால்தான் சமுதாயம் எந்த காரியத்திலும் வெற்றி பெற முடியும். 'எந்த உணவில் அதிகமான கை போடப்படுகின்றதோ அதுவே சிறந்த உணவு' என்கின்ற அகிலத்தின் அருட்கொடை எம்பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் திருவாக்கு ஒற்றுமையினால் கிடைக்கக்கூடிய 'பரக்கத்தை-அருள் மழையை' பறைசாற்றுகிறதே! அதை கவனத்தில் கொள்ள வேண்டாமா?

கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை குன்றி பிணக்கு ஏற்பட்டால் அதன் இறுதி முடிவு விவாகரத்தில் போய் முடிகிறது. ஆகுமானவற்றில் அல்லாஹ்வுக்கு மிக வெறுப்பான செயலல்லவா அது! கணவன் மனைவிக்கிடையில் வேற்றுமை அல்லாஹ்வின் வெறுப்புக்குள் அல்லவா நம்மை தள்ளி விடுகிறது! அதுவும் அல்லாஹ்வின் 'அர்ஷே' நடுங்கும் அளவுக்கு!
பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் பிளவு ஏற்பட்டால் அது, கட்டாய பாகப்பிரிவினயாகிறது!
ஆசிரியர்கள் மாணவர்களுக்குள் ஒற்றுமை சிதறுமானால் அது கல்வியின் வீழ்ச்சிக்கு அடிப்படையாகிவிடுகிறது!
அரசியல்வாதிகளுக்கிடையில் பிளவு ஏற்படும்போது மக்களின் செல்வத்தையும், காலத்தையும் சுரண்டுவதற்கு இன்னொரு புதுக்கட்சி உதயமாகிறது!
அறிஞர்களுக்குள் ஒற்றுமை குன்றுமானால் அது சமுதாயத்தின் மிகப்பெரும் வீழ்ச்சிக்கு அடிப்படையாகி விடும்.
இன்று நமது சமுதாயத்தில் வரதட்சணைக் கொடுமையால் பல குடும்பங்களில் ஒற்றுமைச்சிதைவு ஏற்பட்டுள்ளது கண்கூடு. பல இடங்களில் ஒற்றுமை, வேற்றுமையாக மாறுவதற்கு 'செல்வம்' மிகப்பெரும் காரணமாக அமைகிறது. இதன் காரணத்தால், உறவைத் துண்டித்து வாழக்கூட அந்த பேராசைக்க்காரர்கள் தயங்குவதில்லை. இவர்களை கடுமையாக எச்சரிக்கிறது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய திருவாக்கு. சொன்னார்கள் அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் '(உறவைத்)துண்டிப்பவன் சுவர்க்கம் செல்ல மாட்டான்!' (நூல்: புகாரி, முஸ்லிம்)
சுவர்க்கம் வேண்டாம் என்று அடம்பிடிக்கக் கூடியவர்கள்கூட உலகில் உண்டா என்ன! இருக்கின்றார்களே, உறவைத் துண்டித்து நரகத்திற்குத்தான் செல்வோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சிலர்! இவர்களை அறியாமையில் உழல்கின்றவர்கள் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மேற்கண்ட அறிவுரையை பார்த்த பிறகாவது அவர்கள் திருந்தி வாழ முயற்சிக்க வேண்டாமா?
இதையொட்டி, ஓற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தும் இன்னொரு ஹதீஸ்: 'எவருக்கு எல்லா பேறுகளின் வளமும், நீண்ட ஆயுளும் ஏற்பட வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறதோ அவர் உறவுடன் ஒட்டி வாழட்டும்.' ஒற்றுமையைக் கடைப்பிடிக்க ஆவலைத் தூண்டும் அற்புதமான வார்த்தைகளல்லவா இது! அனைத்து வளமும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ எவருக்கத்தான் ஆசையிருக்காது?
இந்த ஹதீஸை கொஞ்சம் விரிவாக சிந்தனை செய்து பாருங்கள்: 'உறவுடன் ஒட்டி வாழட்டும்!' உறவு என்றால், நம் சொந்த ரத்த பந்தங்களை மட்டுமா குறிக்கிறது? திருக்குர்ஆனின் வழிகாட்டுதல்படி மனித இனம் அத்தனையும் ஒரே தாய் தந்தை மூலம் உலகிற்கு வந்தவர்கள் தானே! யோசிக்க வேண்டாமா? குடும்பத்தார்கள் மட்டுமின்றி அனைவருடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டியது அவசியமல்லவா?
'காலத்தின் மீது சத்தியமாக, மனிதன் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டான். ஆயினும், எவர்கள் நம்பிக்கைக் கொண்டு, நற்செயல்களையும் செய்து, சகித்துக்கொள்ளுமாறும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து வந்தார்களோ, அவர்களைத் தவிர! (இவர்கள் நஷ்டவாளிகள் அல்ல)' (திருக்குர்ஆன் 103 : 1-3) சகிப்புத்தன்மை இல்லாமல் ஒற்றுமை வருமா என்ன?

பொதுவாக ஒற்றுமையின் அவசியத்தை பெரும்பாலானோர் இறிந்தே இருக்கின்றனர். ஆனால், அதை கடைப்பிடிக்கத்தான் வழி தெரியாதவர்களாக, விழியிருந்தும் குருடர்களாகத் தடுமாறுகிறார்கள். திருக்குர்ஆனின் ஒளியும, திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலும் நம்மிடையே இருந்தும், அதை அலட்சியம் செய்பவர்களாக வாழ்வதால் அல்லவா இன்றைய இஸ்லாமிய சமுதாயம் ஒற்றுமையின்றி பிளவுபட்டு நிற்கிறது!
இஸ்லாமிய கோட்பாட்டை உறுதியாகக் கடைப்பிடித்துத் தான் நமது சமுதாயம் எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்கியது. எப்பொழுது அதன் 'அசல் கோட்பாட்டை' விட்டு விலகி யதோ, அது முதல் ஒற்றுமை குன்றிய சமுதாயமாக மாறிவிட்டது. இந்த மாபெரும் சருக்கலுக்கு அறிஞர்கள் முதல் அரசியல்வாதிகள் வரை ஆணிவேராக இருந்துள்ளாரகள் என்பதை மறைக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது, மறக்கவும் முடியாது!

நமது நாட்டின் முந்தைய சரித்திரத்தை புரட்டிப்பார்த்தால் கூட ஒற்றுமையின் உயர்வு நமக்குப் புலப்படும். முஹம்மது பின் காசிம் நமது இந்திய மண்ணில் காலடி எடுத்து வைக்கும்போது, இங்கு எத்தனைப்பேர் முஸ்லிம்களாக இருந்தனர், அதற்குப்பிறகு எத்தனை முஸ்லிம் மன்னர்கள் நம் நாட்டை அரசோச்சினர்! அவர்கள் ஆண்ட காலத்தில் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மிக சொற்பமாக இருந்தும் அவர்களால் ஆள முடிந்தது. ஆனால் பிற்காலத்தில் முஸ்லிம்களிடம் பிரிவுகள் அதிகமாகி, பிளவுகள் ஏற்பட்டதால் பலமிழந்தவர்களாக மாறினர். எண்ணூறு ஆண்டுகள் முஸ்லிம்களால் ஆளப்பட்ட ஸ்பெயினிலும் இதே கதைதான் என்பதைக் கண்ட பிறகாவது நாம், குறிப்பாக சமுதாயத்தின் தலைவர்களாக பொறுப்பேற்றிருப்பவர்கள் தெளிவு பெற வேண்டாமா?
ஏன் நீண்ட கால சரித்திரத்துக்கு போவானேன்! நமது கால கட்டத்தைத்தான் எடுத்துக் கொள்வோமே!நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் பாபரி மஸ்ஜிதை இழந்திருப்போமா? ஆனால், இன்றைய கால கட்டத்தில் நமது அரசியல் தலைவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருக்கிறார்கள்? சற்று சிந்தித்துப் பாருங்கள். இவர்களது சுயநல அரசியலால் சமுதாயத்தைப் பிளந்து, ஒற்றுமையைச் சிதைத்து மற்றவர்கள் பார்வைக்கு மேலும் பலம் குன்றிய சமுதாயமாக, காட்சிப் பொருளாக அல்லவா ஆக்கி விட்டனர் நம் சமுதாயத்தை! இதில் எங்களது பங்கையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று அறிஞர்களும்கூட அல்லவா போட்டி போடுகின்றனர்!
ஓற்றுமையின் அடிப்படையிலேயே இஸ்லாம் அனைவரையும் சகோதரராக பாவிக்கச் சொல்கிறது. 'அடுத்த வீட்டுக்காரன் பட்டினி கிடக்கும்போது தான் மட்டும் உணவு உண்பவன் உண்மையான விசுவாசியல்ல' என்கின்ற திருநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாக்கு தர்ம சிந்தனையுடன் ஒற்றுமையையும் வலியுறுத்துவதாகவே அமைந்துள்ளதை கவனிக்க வேண்டாமா!
'மூன்று பேர் ஓரிடத்திற்கு சேர்ந்தார்ப்போல் பயணமானால் தங்களில் ஒருவரை தலைவராக ஆக்கிக் கொள்ளவும்' என்கின்ற பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கனிமொழி, பயணம் போன்ற தற்காலிக நிலையில்கூட வேற்றுமை வளராமல் ஒற்றுமை நிலைநாட்டப்பட வேண்டும் என்கின்ற அடிப்படையை வலியுறுத்தும் போது பயணமல்லாத சாதமாரண நிலைமையில் ஒற்றுமை ஏற்படுத்துவது எவ்வளவு முக்கியம் என்பதை உணராமல் இருப்பது சரியா?

நமது ஜமா அத்துத் தொழுகையும், ஹஜ்ஜும் ஒற்றுமைக்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. ஐவேளை தொழுகையை பள்ளியில் தோளோடு தோள் நின்று தொழுதுவிட்டு வெளியில் வந்தவுடன் அதற்கு மாற்றமாக நடப்பது உண்மையான விசுவாசிக்கு அழகல்லவே! இறைவணக்கத்தில் ஒற்றுமையைப் பேணக்கூடிய நாம், வாழிவின் ஒவ்வொரு காலகட்டத்திலும் அதைப் பேண மறுப்பது முறையாகுமா?
விண்ணையும் மண்ணையும் படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ் கூறுகின்றான்:
'நீங்கள் எல்லோரும் (ஒற்றுமையுடன்) அல்லாஹ்வுடைய (திருக்குர்ஆன் எனும்) கயிற்றை பலமாக பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள் (உங்களுக்குள் பகையை வளர்த்துக்கொண்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்.' (திருக்குர்ஆன் 3 : 103)
கடலில் தத்தளிக்கும் ஒருவனிடம் கயிற்றை வீசி எறியும்போது அவன், அதை கெட்டியாகப் பிடித்துக் கொண்டால் கரையிலிருப்பவன்; அவனை இழுத்துப்போட்டு விடுவான். ஆனால் கயிற்றை பிடிப்பவன் அதை வலுவாகப் பிடிக்க வேண்டும். ஏனோ தானோவென்று பிடித்தானென்றால் அவன் கடலில் மூழ்க வேண்டியதுதான். அதுபோலத்தான், திருக்குர்ஆனையும் வலுவாகப் பின்பற்றி பிடித்துக் கொள்ள வேண்டும். ஏனோ தானோவென்று பின்பற்றினால் கயிற்றை வலுவாகப் பிடிக்காதவனுடைய கதிதான்!
நமது வாழ்வில் ஒற்றுமை நிலவ வேண்டுமானால் பெருமை, பொறாமை, பேராசை இவைகளைக் களைய வேண்டும்.

இறையுணர்வு நமது உள்ளத்தில் சுடர்விட்டுப் பிரகாசிக்க வேண்டும்.
பிளவு ஏற்படுகின்ற நேரத்தில் பொறுமையைக் கடைப்பிடித்து ஒற்றுமைக்கு வழி வகுக்க வேண்டும்.
நன்மையான காரியங்களைச் செய்வதிலும், தூண்டுவதிலும் ஒன்று பட வேண்டும்.
அல்லாஹ் திருமறையில்:
'விசுவாசிகளே! நீங்கள் தீனுல் இஸ்லாத்திற்குள் முழுமையாக நுழைந்து விடுங்கள்.' (2 : 208)
என்று அழைப்பு விடுக்கின்றான். தீனுல் இஸ்லாத்துக்கள் முழுமையாக நுழைந்து விட்டால் ஒற்றுமை பூத்துக் குலுங்காதா என்ன!

'சமுதாயங்களில் சிறந்த சமுதாயம்' என்கின்ற வல்லோன் அல்லாஹ்வின் நற்சான்றிதழுக்கொப்ப இனியாவது, சிறந்த சமுதாயமாக ஒற்றுமையுடன் வாழ கற்றுக்கொள்வோமே! எல்லாம் வல்ல அல்லாஹ் நல்லருள் புரிவானாக! வஆகிரு தஃவானா அனில் ஹம்துலில்லாஹி ரப்பில் ஆலமீன்.
www.nidur.info